

ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாகக் குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரை தாங்கி செல்லும் வாகனமாகவும், அவரது தாசனாகவும் திகழ்பவர் கருடன். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும்.
ஆனி மாதம் சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதார திருநாள். சக்கரத்தாழ்வார் என்பவர் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்ராயுதத்தின் உருவமாக கருதப்படுகிறார் . இவர் சுதர்சனர் ,திருவாழியாள், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். 16 கைகளை கொண்டவராகவும் சில இடங்களில் 32 கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு என தனி சன்னதி காணப்படுகிறது. திருமாலுக்கு இணையானவர் என்று ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் போற்றுகிறார்.
விஷ்ணுவின் சக்கரத்தை சுதர்சனம் என்பர் இதற்கு நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மரச்சக்கரமாகவும் ,நல்லவர்களுக்கு அரசக்கரமாகவும் இருப்பது இதன் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அருங்கோன சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும். தலையில் அக்னி கிரீடம் தாங்கி பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார். சக்கரத்தாழ்வாரையும் அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும் பஞ்சபூதங்களையும் அஷ்டலட்சுமிகளையும் எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வார் ஜெயந்தியான இன்று திருவாரூர் மாவட்டம் வடுவூர் கோதண்டராமர் கோவிலில் எழுந்தருளி உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது .மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஹோம பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் விஜய வள்ளி தாயார் சமேத உற்சவர் சுதர்சனருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment