திருவாரூர், ஜன.02:
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தற்போது அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மரம் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், இயற்கையின் மீது கொண்ட பற்றின் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பு காவல்துறையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அவர், அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது கல்வித்துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக உணரப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள பழனிச்சாமி முடிவு செய்தார். அதன் ஒரு பகுதியாக, தற்போது ஊட்டி–பந்தலூர் பகுதியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி பயணித்து வருகிறார். தனது பயணத்தின் ஆறாவது நாளில் இன்று திருவாரூர் மாவட்டத்தை வந்தடைந்தார்.
இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டு வரும் அவரை, வனம் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்தினர். மேலும், பயணத்தின் போது பல்வேறு இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து, மரம் வளர்ப்பதின் அவசியம், இயற்கையை பேணிக் காப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில், வரும் ஐந்து ஆண்டுகளில் ஆறு கோடி மரங்களை நட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள் மற்றும் மனதுக்கு பிடித்தவர்களின் பிறந்த நாட்களில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.jpeg)

No comments:
Post a Comment