திருவாரூரில் திடீர் கனமழை; சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 January 2026

திருவாரூரில் திடீர் கனமழை; சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி.


திருவாரூர், ஜன.25:


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக குளிர் நிலவி வந்த சூழலில், நேற்று முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் வரை கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவி வருவதால், தமிழகத்தின் சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.


அந்த அறிவிப்புக்கு ஏற்ப, திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் மழையின் தீவிரம் அதிகரித்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று பிற்பகல் 2 மணி அளவில் திருவாரூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.


வாழவாய்க்கால், சேந்தமங்கலம், விளமல், அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, கண்கொடுத்தவணிதம், கமலாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர். சில தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து மெதுவாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.


தொடர்ந்து மழை பெய்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad