திருவாரூர், டிசம்பர் 30:
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில், Divine World Book of Records பதிவைப் பெறும் வகையில், ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற திருமுறை இசைப்பெருவேள்வி விழா மற்றும் உலக சாதனை நிகழ்வு – 2025 வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து தேவாரம், திருப்பதிகங்கள் உள்ளிட்ட திருமுறை பாடல்களை ஒரே நேரத்தில் பாடி உலக சாதனை நிகழ்த்தினர். புனிதமான கோவில் சூழலில் நடைபெற்ற இந்த இசை நிகழ்வு பக்தர்களிடையே பெரும் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியது.
மேலும், தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த மலேசிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி – சட்டை அணிந்து நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்ததுடன், புகைப்படங்கள் எடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில், ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று திருமுறை இசை நிகழ்த்தி உலக சாதனை படைத்தது முதல் முறையாக நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு தமிழிசை மரபையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் உலக அரங்கில் மேலும் உயர்த்தியதாக ஆன்மிக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment