முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா நிறைவு – பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 6 November 2025

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா நிறைவு – பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்பு.


முத்துப்பேட்டை, நவ. 06 -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் அமைந்துள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகும். இந்த தர்காவிற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வருவது இதன் சிறப்பாகும். அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்யும் மத ஒற்றுமையின் அடையாளமாக இந்த தர்கா திகழ்கிறது.


இத்தர்காவில் நடைபெறும் பெரிய கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு நடைபெற்ற 724-வது பெரிய கந்தூரி விழா கடந்த மாதம் 23 ஆம் தேதி புனித கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், பிராத்தனைகள், மௌலூது ஷரீஃப் ஓதல், சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.


முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா கடந்த 1 ஆம் தேதி இரவு துவங்கி 2 ஆம் தேதி அதிகாலை வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் வெளிநாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், கந்தூரி நிறைவு நாளான நேற்று இரவு புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி ஆன்மிக மகிமையுடன் நடைபெற்றது.


மாலை 7 மணிக்கு தாவூதியா மஜ்லிஸில் உலக அமைதிக்காக மௌலூது ஷரீஃப் ஓதப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் ஜியாரத் முன்னிலையில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. பின்னர் சொற்பொழிவுகள் முடிவடைந்ததும், இரவு 9 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர்அலி சாஹிப் தலைமையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி துவங்கியது.

அப்போது தர்கா டிரஸ்டி சாகிப் சிறப்பு துஆ ஓதியதுடன், பக்தர்கள் “நாரே தக்பீர்! நாரே தக்பீர்!” என முழங்கினர். அதிர்வேட்டுகள் முழங்கிய நிலையில், வண்ணமயமான விளக்குகள் மற்றும் வாடிக்கை வேடிக்கைகளுடன் புனித கொடி இறக்கப்பட்டது.


இதன்போது பேசுகையில் எஸ்.எஸ். பாக்கர்அலி சாஹிப்,

“14 நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவை மத ஒற்றுமையுடன் வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து தரப்பு மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும், ஊடகத் துறைக்கும், நன்கொடையளித்த பக்தர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்,”
என்று கூறினார்.


பின்னர் நீண்ட வரிசையில் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு துஆ பிராத்தனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அனைவருக்கும் தப்ரூக் (பிரசாதம்) வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆன்மிக நிறைவை பெற்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

No comments:

Post a Comment

Post Top Ad