தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு 60 ஆண்டுகளாக இருந்து வந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்றி புதிய அரசாணை 243 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையால் ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்பதை மாற்றி மாநில அளவிலான முன்னுரிமை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போய்விடும் எனவே அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும்,
அரசாணை 243 இன் படி நடைபெறும் ஆசிரியர்கள் கலந்தாய்வு பொது மாறுதலை ரத்து செய்ய வேண்டும். மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளான எமிஸ் வலைதள பதிவில் இருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பல்வேறு பிற பணிகளை வழங்குவதை கைவிட வேண்டும். மாணவர்களின் கல்விநலன் கருதி அவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ஈவேரா பாலமுருகன், காசிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற போராட்டத்தில் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் ரவி மற்றும் முரளி முருகேசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து விளக்க உரையாற்றினார். அதனை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் தரையில் அமர்ந்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment