மன்னார்குடி தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி குறித்து கருத்தரங்கம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

மன்னார்குடி தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி குறித்து கருத்தரங்கம்.


மன்னார்குடியில் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் சந்திரயான்-3 வெற்றியின் அறிவியல் மன்றம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சந்திராயன் -3 வெற்றியானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி பயணத்தின் மைல் கல்லாக கருதப்படுகிறது. நிலவின்  தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்களின் பங்கு முதன்மையானது. அண்மையில் சந்திராயன் ஆராய்ச்சி திட்டத்தில் பணியாற்றிய தமிழர்களை தமிழக முதல்வர் கெளரவித்தார்.

இந்நிகழ்வை "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" எனும் தலைப்பில் அனைத்து பள்ளி கல்லூரிகளின் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல  கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு உதவி பெறும் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பாக சந்திராயன்- 3 வெற்றி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.


பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெபமாலை தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை சகாயலில்லி முன்னிலை வகித்தார். அறிவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியர் அவிலா பிரான்சிஸ் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மன்னார்குடி கிளைத்தலைவர் முனைவர் எஸ். அன்பரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சந்திராயன் 1,2,3 ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இஸ்ரோவின் வரலாறு குறித்தும் இஸ்ரோவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.


நிகழ்ச்சியில் சந்திராயன் குறித்த வினாடி வினா நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நடைபெற்ற கருத்தரங்கில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவிகள் 1500 பேர் பங்கேற்று பயனடைந்தனர். நிறைவாக அறிவியல் ஆசிரியை ஆர்.சங்கீதா நன்றி கூறினார்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad