ஸ்ரீசத்குரு கீர்த்தனைகளில் பெரும்பாலானவை திவ்யநாம கீர்த்தனைகளாக அமைந்தவை. இவர் சுமார் 2400க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவரது எண்ணற்ற கீர்த்தனைகளில் மிகவும் பிரசித்திபெற்றது பஞ்சரெத்தின கீர்த்தனைகள். குறிப்பாக ஸ்ரீசத்குருதியாகராஜர் 21 வருடத்தில் 96 கோடி இராமநாம ஜபம் செய்து ஸ்ரீஇராமபிரானை வழிபட ஸ்ரீஇராமபிரான் தனது திருமுகத்தை இவருக்கு காண்பித்து காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீசத்குரு தியாகராஜர் வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கை வாழ்ந்ததோடு ஒவ்வொரு நாளும் தனது குடும்ப தேவைக்காக நாள்தோறும் உஞ்சவிருத்தி பஜனை மேற்கொண்டு பிக்க்ஷை பாத்திரம் ஏந்தி அரிசியை தானமாக பெற்று மறுநாளுக்கான சேமிப்பு செய்யாமல் வாழ்க்கை வாழ்ந்தவர். பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குருதியாகராஜரின் ஜெயந்தி திருநாளையொட்டி அவர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இசைகலைஞர்கள் ஸ்ரீசத்குருதியாகராஜர் இயற்றிய பிரசித்தி பெற்ற பஞ்சரெத்தின கீர்த்தனை பாடி இசை ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
மேலும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இசை விழா அரங்கில் நூற்றுக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்றுசேர அமர்ந்து பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீசத்குருதியாகராஜர் ஜெயந்திநாளில் சாஸ்திர சம்பிரதாயப்படி குழந்தைகள் பிறந்தால் வழங்கப்படும் நெல்விதை தானம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- செய்தியாளர் ரா.பிரியங்கா.
No comments:
Post a Comment