திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாரூரில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் இயங்கி வருகிறது.
இங்கு வெளிநோயாளிகளாக தினந்தோறும் 1200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் நிலையில் உள்நோயாளிகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்தும நோயாளிகள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கு இயங்கி வரும் அவசர சிகிச்சை பிரிவிற்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்கு வந்து சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.மேலும் தஞ்சை, நாகை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளின் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விபத்துகளின் போது தலையில் ஏற்படும் காயத்திற்கு மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு மற்றும் மூளையில் ஏற்படும் கட்டி உட்பட பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிப்பதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது முக்கியமாக இருந்து வருகிறது. இந்த ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னரே அதற்குரிய சிகிச்சையினையும் மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் என்பது ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்த அடிப்படையில் இந்த மருத்துவகல்லூரியில் இயங்கி வருகிறது. இதில் அரசு காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லாமலும், மற்றவர்களுக்கு ரூ 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 வரையிலும் கட்டணம் செலுத்தப்பட்டு சேவை நடைபெற்று வருகிறது.நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 நபர்கள் வரையில் இந்த ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 4ந் தேதி முதல் ஏற்ப்பட்ட பழுது காரணமாக கடந்த 10 நாட்களாக இயங்காததன் காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் நிலைய உதவி மருத்துவர் டாக்டர் அருண்குமாரிடம் கேட்ட போது, இயந்திரம் பழுது காரணமாக ஸ்கேன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதி பெறப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் கூறுவதை போன்று அந்த தனியார் மருத்துவமனையானது சுமார் 5 கி.மீ தூரத்தில் இருந்து வரும் நிலையில் கடும் விபத்துள்ளாகி வருபவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் போன்றவர்கள் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் மேற்படி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் இயங்குவதற்கு மருத்துமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment