பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கவும், அரசால் அஞ்சல்துறையின் மூலம் சுகன்யா சம்ரித்தி சேமிப்புகணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வட்டிவிகிதம் மற்ற சேமிப்புதிட்டங்களைவிட மிகவும் அதிகம். இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாக பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உரியதாகும்.பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இக்கணக்கை தொடங்கலாம்.
ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே துவங்கலாம். கணக்கு துவங்கும்போது குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி துவங்கலாம். கணக்கில் மேற்கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.50-ன் மடங்குகளில் செலுத்தலாம். ஒருவர் ஒருகணக்கில் எத்தனை முறைவேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.250- கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்த முடியும். தற்போதைய வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆகும். இது அரசின் மாறுதலுக்குட்பட்டதாகும்.
கணக்கு துவங்கப்பட்ட நாளிலிருந்து 21 வருடம் முடிந்தபின் முதிர்ச்சி அடையும். உங்கள் பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பியவுடன் அவர்களின் மேற்படிப்பு மற்றும் திருமணத்திற்காக மொத்ததொகையில் அசல் மற்றும் வட்டி சேர்த்து 50 சதவீகிதம் வரை எடுத்துக்கொள்ளலாம்.இக்கணக்கில் முதல் 15 வருடம் வரை மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது. இதில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்குஉண்டு. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப படிவத்துடன் பெற்றோரின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் (இருப்பிடமுகவரிக்கு), குழந்தையின் பிறப்புச்சான்றிதழ், பெற்றோரின் புகைப்படம் – 2 ஆகியவற்றுடன் அனைத்து தலைமை அஞ்சலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் விண்ணபிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அஞ்சலக அஞ்சல் அலுவலர், அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ஆகியோர்களை தொடர்புகொள்ளலாம்.
எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பெற்றோர்கள் தங்களது செல்லமகளை செல்வ மகளாக்க இந்த திட்டத்தில் இணைந்து பயனடையலாம் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா.
No comments:
Post a Comment